இலட்சக் கணக்கானவர்கள் விமான ஓடு தளங்களில் குவிந்துள்ள நிலையில், விமானப் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
காபூல் விமான நிலையத்தைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ள அமெரிக்கப் படையினர் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வான் நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். மேலும் காபூல் சர்வதேச விமான நிலையத்தின் அனைத்து விமான சேவையும் ரத்து செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில் தலிபான்கள் தரப்பில் ஆப்கானின் இடைக்கால அதிபராக அலி அகமது ஜலாலி என்பவர் நியமிக்கப் பட்டிருப்பதாக உறுதிப் படுத்தப் படாத தகவல் வெளியாகி உள்ளது.ஆட்சியைக் கைப்பற்றினாலும், பொது மக்கள் உயிருக்கும், உடமைக்கும் எந்தவித பாதகமும் ஏற்படாது என தலிபான்கள் அறிக்கை விட்டும் அதை நம்பத் தயாராக இல்லாத ஆப்கான் மக்கள் நாட்டை விட்டு வெளியேற முனைப்புக் காட்டி வருகின்றனர். ஆப்கானின் மோசமான நிலையை அடுத்து பக்கத்து நாடான பாகிஸ்தான் உடனே தனது அனைத்து எல்லைகளையும் மூடி விட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
காபூலில் இருந்து அனைத்து இந்தியர்களையும் பத்திரமாக மீட்பது தொடர்பில் இந்திய மத்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றது. இந்நிலையில் ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி வன்முறையைத் தவிர்ப்பதற்காகத் தான் தனது காபூல் அலுவலகத்தில் இருந்து வெளியேறி விட்டதாக அறிவித்துள்ளார். இதேவேளை காபூல் நகரம் உட்பட ஆப்கான் முழுதும் தலிபான்கள் வசமானதற்கு அதிபர் ஜோ பைடென் தான் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என முன்னால் அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.