உலகத் தமிழர்களின் கலாசார அடையாளமாக திகழும் யாழ்ப்பாணம் பொதுநூலகத்துக்கு வித்திட்ட கே.எம். செல்லப்பாவின் 125-வது பிறந்த நாள் நாளை(24) கொண்டாடப்படுகிறது.
கற்றவன் பண்டிதனாவான்' என்ற உயர்ந்த சிந்தனையை அனைவருக்கும் விதைத்த மாமனிதர், அறிஞர், பரோபகாரி கே. எம். செல்லப்பா அவர்கள். இவர் தனது சிறு வயது முதல் புத்தகத்தின் மீது தீராத ஆர்வம் கொண்டு எப்பொழுதும் வாசிக்கும் பழக்கத்தினை உடையவர்.
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு என்ற திருக்குறளின்படி வாழ்ந்தவர். தன் வீட்டில் பாரம்பரியமாக வைப்பில் உள்ள பல புத்தங்களை தன் நெருங்கிய நண்பர்களுடன் அவ்வப்போது வாசிக்கப் பகிர்ந்து வந்தார்.வாசிப்பவர்களின் அறிவு முதிர்ச்சியை கண்டும் அகமகிழ்ந்தார். 1933ம் ஆண்டு தனது வீட்டிலேயே ஒரு அறையை ஒதுக்கி அருகில் வசிக்கும் பலரையும் வாசிக்க அழைத்தார், பின்பு வாசிக்க தெரியாதவர்களுக்குத் தானே வாசித்துக் காட்டி அவர்களுக்கு ஆர்வமூட்டினார்.

1934ல் யாழ்ப்பாணத்தில் ஒரு மத்திய இலவச தமிழ் நூலகத்திற்காக ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழில் கோரிக்கை செய்தார் ", மேலும் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள், ஆசிரியர்கள், வணிகர்கள் மற்றும் முக்கிய ஓய்வு பெற்றவர்களை அணுகி புத்ததகங்களைச் சேகரித்தார். இதனைப் பலருக்கும் பயன்படும் வகையில் விரிவுபடுத்தும் நோக்கில், செல்லப்பா அவர்களும் வேறு சில பிரமுகர்களும் இணைந்து செயல்பட்டு, இந்த நூல் நிலையத்தை யாழ் நகரின் மத்தியில் அமைத்து வழி நடத்தினர். .இவ்வாறாக மென்மேலும் வளர்ந்த யாழ்ப்பாண நூலகம் 1936ல் யாழ் மாநகரச்சபையின் முதலாவது முதல்வராகப் பணியாற்றிய சாம்சபாபதி, 1953இல் வண.லோங் அடிகளார் போன்றோரை உள்ளடக்கிய கல்விமான்கள், பிரமுகர்களைக் கொண்ட குழுக்களால் காலத்துக்குக் காலம் பாரிய வளர்ச்சி கண்டு, 1959 ஒக்டோபர் 11ஆம் திகதி தற்போதய இடத்தில் நிரந்தர, சர்வதேச தரத்திலான கட்டடத்தொகுதி பெற்று யாழ்ப்பாணத்திற்கே பெருமை சேர பணியாற்றத் தொடங்கியது.
இவ்வாறாக புத்தூர் பரோபகாரி கே.எம்.செல்லப்பாவின் சிந்தனையில் உதித்து செயல்வடிவம் பெற்று மெல்ல வளரத்தொடங்கிய யாழ். பொது நூலகம். இவரின் காலகட்டத்தில் கிட்டத்தட்ட 97,000 புத்தகங்களுடன், அசல் பனை ஓலைகள், கையெழுத்துப் பிரதிகள், செய்தித்தாள்கள் மற்றும் பல்வேறு மொழிப் பத்திரிகைகள் இந்த யாழ்ப்பாண பொது நூலகத்தில் சேகரிக்கப்பட்டு வைப்பில் இருந்தன. தென் கிழக்காசியாவிலேயே குறிப்பிடத்தக்க கலைக்கோவிலாக இலங்கைக்கு குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கே பெருமை சேர்ப்பதாக ஒரு காலத்தில் விளங்கியது யாழ்ப்பாணப் பொதுசன நூலகம். இன்று யாழ் மண்ணில் ஓங்கி உயர்ந்து தமிழனின் பெருமையை பேசுகிறது.
யாழ் வரலாறில் அழிக்க முடியாத மண்ணின் மாமனிதர், பெரியகோட்டு சக்கடத்தாராக இருந்து இளைப்பாறியவர் மேற்குறிப்பிடப்பட்ட பரோபகாரி கனகசபை முதலிதம்பியார் செல்லப்பா ஆவார். 'கற்றவன் பண்டிதனாவன்' என்ற உயர்ந்த சிந்தனையை அனைவருக்கும் விதைத்த மாமனிதர், அறிஞர், பரோபகாரர் கே. எம். செல்லப்பா அவர்கள். இவர் 24.04.1958இல் மரணமடைந்ததை ஒட்டி 25.04.1958ல் யாழ்.மாநகர சபையில் மேற்கொள்ளப்பட்ட அஞ்சலி தீர்மானத்தின்படி அப்போதைய மேயர் பொ.காசிப்பிள்ளை அவர்களால் குடும்பத்தவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் 'முதன்முதலில் யாழ்ப்பாண மத்திய நூல் நிலையத்தை ஆரம்பித்து நடத்தியவரும் பின் அதனை இம் மாநகரசபையிடம் ஒப்படைத்தவருமான அமரர். மதிப்புமிகு கே.எம்.செல்லப்பா அவர்களின் மறைவு குறித்து அனுதாபம் தெரிவிக்கின்றோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நூலகத்தில் கல்வி பயின்ற பலரும் இன்று உலகளவில் உயர்ந்த நிலையில் மருத்துவம், விஞ்ஞானம் வியாபாரம் போன்ற பலதுறைகளில் பட்டதாரிகளாகவும் மதிப்பு மிக்க கல்விமான்களாகவும் இருக்கின்றனர்.
'மதிப்புமிகு கே.எம்.செல்லப்பாவின் (24.02.2021) 125வது பிறந்தநாளில் அவரின் பொது சேவையை அகமகிழ்ந்து தமிழ் மக்கள் அனைவரும் நன்றியோடு நினைவுகொள்வோம், தனது உடல் பொருள் ஆவி அனைத்தையும் கல்வி கற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்கத் தியாகம் செய்த பரோபகாரி கே.எம்.செல்லப்பா அவர்களை வாழ்த்தி வணங்குவோம்'. என்று அன்னாரின் பேரன், பிரித்தானியா வாழ், விமலன் பாலசுப்ரமணியம் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறார்.