உலகிலேயே அதிக உயரம் கொண்ட146 அடி உயர முத்துமலை முருகன் கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. ஹெலிகாப்டரில் முருகனுக்கு மலர் தூவி பிரம்மாண்டமாக விழா நடந்தது.
தமிழ் நாட்டில் உள்ள சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புத்திர கவுண்டம்பாளையம் முத்துமலை முருகன் கோவில் திருப்பணி கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கியது முருகன் சிலை வடிவமைக்க திருச்செந்தூர் பழமுதிர்ச்சோலை பழனி என ஆறுபடை முருகன் ஸ்தலங்களில் இருந்து மண் கொண்டுவரப்பட்டு மலேசியாவில் முருகனை வடிவமைத்த தியாகராஜ ஸ்தபதி அவர்களால் முருகன் திருவுருவச்சிலை கட்டும் பணி துவங்கியது.
கடந்த ஆறு ஆண்டுகளாக கட்டும் பணி நடைபெற்று வந்த நிலையில் இன்று(06) கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.கடந்த மூன்று நாட்களாக யாக சாலைகள் அமைக்கப்பட்டு ஏராளமான சிவாச்சாரியாரை கொண்டு வேதங்கள் முழங்க யாகங்கள் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நாளான, இன்று கும்பாபிஷேக தினத்தில் பல்வேறு விதமான சிறப்பு யாகங்கள் நடைபெற்று பூர்ணாஹுதி நடைபெற்றது.
பிறகு பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தத்தை யாகசாலையில் வைக்கப்பட்டு பூஜை நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து திருவாரூர் சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் உள்ளிட்ட ஏராளமான குருக்கள் கலந்துகொண்டு தீர்த்தம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. மேள தாளம் இசைக்க மங்கள வாத்தியம் முழங்க நூற்றி நாற்பத்தி ஆறு அடி முத்து மலை முருகனுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் முருகனுக்கு பூக்கள் தூவப்பட்டது. பின்னர் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு தீர்த்தங்கள் தெளிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு நூத்தி நாற்பத்தி ஆறு அடி முருகனுக்கும் உற்சவ மூர்த்தியான முருகனுக்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்த உலகிலேயே மிகப் பிரம்மாண்டமான நூற்றி நாற்பத்தி ஆறு அடி முத்து மலை முருகனை காண சேலம் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.



ليست هناك تعليقات:
إرسال تعليق
ملحوظة: يمكن لأعضاء المدونة فقط إرسال تعليق.