வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை (நவம்பர் 10) புதன்கிழமை விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கன மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மூன்று மாவட்டங்களும் வெள்ள இடரினால் பாதிக்கப்பட்டுள்ளன.
அந்த மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள் முன்வைத்த பரிந்துரைக்கமைய மாகாண ஆளுநரின் அனுமதியுடன் நாளைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்றும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்தார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்றும்(09) விடுமுறை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
யாழில் வெள்ள அனர்த்தம்! 20 ஆயிரம் பேர் பாதிப்பு!! 65 வீடுகள் சேதம்!!! 131 குடும்பங்கள் இடம்பெயர்வு!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 65 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்று மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் 3 மணி வரையிலான பாதிப்பு தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு முதல் பெய்த மழை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இதுவரை 5 ஆயிரத்து 908 குடும்பங்களைச் சேர்ந்த 19 ஆயிரத்து 987 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், நல்லூர், சண்டிலிப்பாய், சங்கானை,உடுவில், தெல்லிப்பழை, கோப்பாய், சாவகச்சேரி, கரவெட்டி, பருத்தித்துறை, மருதங்கேணி, வேலணை, ஊர்காவற்றுறை, காரைநகர் பிரதேச செயலர் பிரிவுகளிலேயே இந்த தரவுகள் கிடைத்துள்ளன.
131 குடும்பங்களைச் சேர்ந்த 438 நபர்கள் மாத்திரமே வாழ்விடங்களிலிருந்து இடம்பெயர்ந்து தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.



ليست هناك تعليقات:
إرسال تعليق
ملحوظة: يمكن لأعضاء المدونة فقط إرسال تعليق.