யாழ். பல்கலைக் கழக வளாகத்தில் மீள் நிர்மானம் செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சற்று முன்னதாக பல்கலைக் கழக மாணவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் கடும் அழுத்தத்தை அடுத்து மீண்டும் நினைவுத் தூபியை அதே இடத்தில் அமைப்பதற்கு பல்கலை நிர்வாகம் முன்வந்தது.
இதையடுத்து கடந்த ஜனவரி 11 ஆம் திகதி அதிகாலை, யாழ். பல்கலைக் கழக உப வேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.சிறிசற்குணராசா அவர்கள் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக உப வேந்தரின் அனுமதிக்கு அமைய, அடிக்கல் நாட்டப்பட்டதை தொடர்ந்து, மாணவர்களால் நினைவுத் தூபி கட்டுமானம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றமாக மீள அமைக்கும் பணி நிறைவுக்கு வந்த நிலையில் இன்று(23) காலை 7.00 மணியளவில் மாணவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
புதுப் பொலிவுடன் அமைக்கப்பட்டிருக்கும் முள்ளவாய்க்கால் நினைவு முற்றம் மாணவர்களால் திட்டமிட்டவாறு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நினைவு முற்றத்தில் நிறுவப்பட்டிருக்கும் நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவித்து, ஈகைச் சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவர்களால் நினைவுத் தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.
யாழ். பல்கலைக் கழக உப வேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.சிறிசற்குணராசா அவர்களால் திறந்து வைக்கப்பட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், உப வேந்தருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




ليست هناك تعليقات:
إرسال تعليق
ملحوظة: يمكن لأعضاء المدونة فقط إرسال تعليق.