உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா, ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 25 வரை நடக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக, மதுரை சித்திரை திருவிழா பக்தர்கள் இல்லாமல், கடந்த ஆண்டைப்போல், இந்த வருடமும் கோவில் வளாகத்திலேயே திருவிழா நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், ஆகமவிதிப்படி தடை இன்றி சித்திரை திருவிழா நடத்த, அரசிடம் கோவில் நிர்வாகம் அனுமதி கேட்டிருந்தது.
சித்திரை திரு விழா நடைபெறாமல் போனால், மதுரையில் உள்ள அழகர் கோவில் போன்ற கோவில்களுக்கும் வரும் வருமானம் பெருமளவில் இழக்க நேரிடும் என்பதோடு, திருவிழாக்களின் போதும் உண்டியலில் சேரும் சுமார் 60 லட்சம் ரூபாய், வராமல் போனால் இது கோவிலுக்கு மிகப்பெரிய இழப்பு என்றும் கோவில் ஊழியர்களுக்கான சங்கம் மாநில அரசிடம் கோரிக்கை வைத்தது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் முழு வீச்சில் நடைபெற்ற போது, பொது மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. அப்போது அரசு எந்த விதமான கட்டுப்பாடும் விதிக்காமல் இருந்த நிலையில், தேர்தல் முடிந்த பிறகு திருவிழாக்களுக்கு தடை விதிப்பது ஏன் என்ற கேள்வி பக்தர்கள் மனதில் எழாமல் இல்லை.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, விழாவை கோவில் நிர்வாகம் கொண்டாட முடியாமல் போன நிலையில், இந்த ஆண்டும் பொது கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வரும் 24ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திருக்கல்யாணம் முடிந்த பிறகு அம்மனை திருமணக்கோலத்தில் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


ليست هناك تعليقات:
إرسال تعليق
ملحوظة: يمكن لأعضاء المدونة فقط إرسال تعليق.