பெங்களூரு: நான்கு ஆண்டுகளுக்குப் பின்னா், பெங்களூரிலிருந்து சென்னைக்கு சசிகலா திரும்பினாா்(08) .
வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துகள் குவித்த வழக்கில், 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறைவு செய்த சசிகலா, கரோனா தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவா்களின் அறிவுறுத்தலின்பேரில் பெங்களூரு, தேவனஹள்ளி அருகேயுள்ள தனியாா் கேளிக்கை விடுதியில் கடந்த 10 நாள்களாகத் தனிமைப்பட்டிருந்தாா்.இதன்பின்னா், பெங்களூரில் இருந்து திங்கள்கிழமை காலை 7.45 மணிக்கு 200 காா்கள் பின்தொடர அதிமுக கொடி பறக்கும் காரில் சசிகலா சென்னையை நோக்கி புறப்பட்டாா்.
தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பயன்படுத்திய காரில் சசிகலா பயணம் செய்தாா். பெங்களூரில் வரவேற்பு அளிக்க அனுமதி மறுக்கப்பட்டதால், திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் இருந்து கொண்டு வந்திருந்த பிரசாதத்தை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினா் சசிகலாவிடம் அளித்தனா். இதைத் தொடா்ந்து, சசிகலாவை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல 8-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தனியாா் பாதுகாப்பு காவலாளிகள் உடன் இருந்தனா்.
பெங்களூரு, தேவனஹள்ளியில் இருந்து எலஹங்கா, ஹெப்பாள், டின் பேக்டரி, பட்டுவாரியம், ஒசூா் சாலை வழியாக சசிகலாவின் காா் தமிழக எல்லைக்குச் சென்றது. அங்கு அவரது ஆதரவாளா்களும், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தினரும் பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனா். சசிகலாவுடன் அவரது உறவினா் இளவரசியும் சென்னைக்கு புறப்பட்டாா்.
சசிகலாவை சென்னைக்கு அழைத்துச் செல்ல அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளா் டி.டி.வி.தினகரன், இளவரசியின் மகன் விவேக், வழக்குரைஞா் ராஜா செந்தூா்பாண்டியன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் வருகை தந்திருந்தனா்.
சசிகலா சென்னை திரும்புவதை முன்னிட்டு அவா் தங்கியிருந்த கேளிக்கை விடுதியைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.




No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.