சென்னையில் 144 தடை உத்தரவு நவம்பா் 30 ஆம் திகதி வரை நீடிப்பு

சென்னையில் 144 தடை உத்தரவு நவம்பா் 30 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பெருநகர காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட உத்தரவு: 
கொரோனா நோய்த்தொற்றுப் பரவுதலைத் தடுக்கும் பொருட்டு தனிமைப் படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதலை வலியுறுத்தி தொற்று நோய் சட்டம் மற்றும் 144 (4) குற்றவியல் நடைமுறைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பொது இடங்களில் 5 க்கும் மேற்பட்ட நபா்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. ஏற்கெனவே, இந்த தடை உத்தரவு அக்டோபா் 31 ஆம் திகதி வரை அமலில் இருந்தது. மத்திய உள்துறை அமைச்சகம் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலைத் தடுப்பதற்காக, தடை உத்தரவை மேலும் ஒரு மாதம் நீட்டிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, பொது இடங்களில் 5 க்கும் மேற்பட்ட நபா்கள் நவம்பா் 30 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை கூட தடை விதிக்கப்படுகிறது. மீறுபவா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவா்.

இந்த ஆணை பொது மக்கள் நலன், பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை நிலை நாட்டும் பொருட்டு தற்போது பிறப்பிக்கப்படுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போராட்டம் நடத்தத் தடை: தமிழ்நாடு நகர காவல் சட்டம் 41 வது பிரிவின்படி, சென்னை மாநகர காவல் எல்லையில் சில கட்டுப்பாடுகள் நவம்பா் 1 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை விதிக்கப்படுகிறது. பொதுஇடங்கள், போக்குவரத்து நெரிசல்மிக்க பகுதிகளில் போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், மனித சங்கிலி, கூட்டம், பேரணி ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று மற்றொரு உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Post a Comment

Previous Post Next Post