நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணியின்போது இடிந்து விழுந்த விவகாரத்தில் முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் கலெக்டர் ஆபீஸ் அருகே, 25 ஏக்கர் பரப்பளவில் 336 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.. கடந்த மார்ச் 5ம் தேதி கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை விழா நடந்தது.
![TTV Dinakaran tweeted about Namakkal Medical College Building construction TTV Dinakaran tweeted about Namakkal Medical College Building construction](https://tamil.oneindia.com/img/2020/10/ttv-1604159550.jpg)
அடுத்த வருஷம் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே புதிய மருத்துவக்கல்லூரி கட்டடத்தை திறந்து விட வேண்டும் என்ற முனைப்புடன் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் கட்டுமான வேலைகளில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில் நேற்று போர்ட்டிகோ போர்ஷன் விடிகாலை 1 மணியளவில் இடிந்து விழுந்தது... இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். கட்டிடம் இடிந்து விழுந்ததற்கு மநீம தலைவர் கமல் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் இதுகுறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.
அவர் ட்விட்டர் பதிவில், " நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளின்போதே புதிதாக கட்டப்பட்ட தூண் உள்ளிட்டவை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதாகவும், அதில் 5 தொழிலாளர்கள் காயமடைந்ததாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
ஆனால், அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் விபத்து நடைபெறவில்லையென்றும், அதிகாரிகள்தான் அதனை இடித்து தள்ளினார்கள் என்றும் கூறியிருக்கிறார். அப்படியானால் விபத்து நடந்ததாக தகவல் வெளியானதும், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அவசர, அவசரமாக அங்கு சென்று பார்வையிட்டது ஏன்?
தரமற்ற பொருட்களை பயன்படுத்தி பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் புதிய கட்டுமானம் இடிந்து விழுந்ததா? இல்லை, திட்டமிடாமல் பணிகளை செய்ததால் இடித்து தள்ளப்பட்டதா? என்ற மக்களின் சந்தேகங்களுக்கு பழனிசாமி அரசு உரிய விளக்கமளிக்க வேண்டும்.
Post a Comment
0 Comments