ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மறக்க முடியாத கிளைமாக்ஸ்கள்!
Sooriyan TVTuesday, July 14, 20200
சினிமாவை பொருத்தவரையில் சில படங்கள் பாதியிலே பார்க்க சலித்துவிடும். ஆனால் சில படங்கள் உச்சக்கட்டம் வரை நம்மை இருக்கை நுனியில் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு சுவரஸ்யமாக இருக்கும். சில படங்கள் விறு விறு கதையம்சம் கொண்டதாகவும், பல்வேறு திருப்புமுனை கொண்டதாகவும் இருக்கும். சில படங்களின் கிளைமாஸ்கள் வீட்டிற்கு சென்றாலும் மறக்காது. ஏதோ ஒரு தாக்கத்தை நமக்கு குறைந்தது 2நாட்களாவது ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். அந்த வகையில் இன்று நாம் பார்க்க போவது தமிழ் சினிமாவில் ரசிகர்களால் தூக்கி கொண்டாடப்பட்ட கிளைமாக்ஸ்கள்.
1. முள்ளும் மலரும்:
1967 ஆம் ஆண்டுக் கல்கி இதழின் வெள்ளி விழாப் போட்டியில் உமா சந்திரன் அவர்கள் எழுதி முதல் பரிசு பெற்ற நாவல் முள்ளும் மலரும். இதை இயக்குநர் மகேந்திரன் அடிப்படையாக வைத்து உருவாக்கிய கதை தான் இப்படம். இந்நாவல் அப்படியே முழுமையாகப் படமாக்கப்படவில்லை, பல மாற்றங்களுக்குப் பிறகே படமானது.
1978 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முள்ளும் மலரும் திரைப்படம் வெளியானது. அண்ணன் தங்கை பாசத்தை அசத்தலாக காட்டி அப்லாஸ் அள்ளிய படம். ”கெட்ட பையன் சார் இந்த காளி” மறக்க முடியுமா என்ன? ரஜினியின் நடிப்பை ரசிக்காதவர்களே இல்லை. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பார்த்து கண்கலங்காதவர்களே இருக்க மாட்டார்கள். ஓடி வந்து வள்ளி அண்ணன் காளியை கடித்து அணைத்து அழுவாள். நாமும் சேர்ந்து அழுது விடுவோம்.
2. நாயகன் :
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். உலகநாயகன் கமல் நடிப்பை பற்றி கூற ஒரு கட்டுரை போதாது. கமல் வேலு நாயக்கர் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருப்பார். இளையராஜா இசையில் ”தென்பாண்டி சீமையிலே” பாடல் எப்போது கேட்டாலும் மனதை வருடாமல் இருந்ததில்லை. எல்லாத்தையும் இழந்து நிற்கும் வேலு நாயக்கரிடம் பேரன் கேட்கும் அந்த கேள்வியே ஒட்டு மொத்த படத்தின் ஒன்லைன் ஸ்டோரி எனலாம்.
3. மூன்றாம் பிறை:
பாலு மகேந்திரா படைப்பில் கமல் – ஸ்ரீதேவிக்கு விருதுகளை குவித்த படம். சினிமா ரசிகர்களை துயரில் ஆழ்த்திய கிளைமாக்ஸ் திரைப்படம் என்றால் அது மூன்றாம் பிறை தான். சீனு (கமல்) விஜி (ஸ்ரீதேவி) மறந்து ரயிலில் அமர்ந்தப்படி பிரட் துண்டுகளை தரும் போது என்னதான் கட்டுப்படுத்தினாலும் கண்கலங்கி கண்ணீர் கொட்டும்.
இந்த படத்தை பார்த்து விட்டு தியேட்டரை விட்டு வெளியே வருபவர்கள் எல்லோரும் விஜி கதாபாத்திரத்தை திட்டிக் கொண்டே வருவார்கள். அங்கு நிற்கிறார் இயக்குனர்.
4. இதயம்:
எல்லோருக்குமே காதலை சொல்ல தயக்கம், படபடப்பு கண்டிப்பாக இருக்கும். ஆனால் அதுவே காதலுக்கு பிரச்சனையானால்? அது தான் இதயம் படத்தின் ஒன்லைன்.நம் இதயங்களைத் துடிக்க வைத்த எண்பதுகளின் சூப்பர்ஹிட் காதல் திரைப்படம்.
காதலியிடம் தன் காதலைச் சொல்ல காதல் கடிதத்துடன் திரியும் நாயகன் முரளி கடைசி வரை தன் காதலை நாயகி ஹீராவிடம் சொல்லவே மாட்டார். கடிதத்தையும் கொடுக்க மாட்டார். இருவரும் சேர்வார்களா? மாட்டார்களா? இப்படி சிந்தித்து சிந்தித்து கடைசியில் நமக்கே இதயம் வலிக்க தொடக்கி விடும்.
5.. காதலுக்கு மரியாதை:
ஜீவாவ நான் விட்டுக்கொடுக்குறேன், அவங்க பெத்தவங்களுக்காக! ஜீவா என்னை தாரை வாக்கறாரு, என் குடும்பத்திற்காக..” பெற்றவர்களுக்காக தங்கள் காதலையே தியாகம் செய்த காதலர்களின் காதலுக்கு மரியாதை. விஜய்- ஷாலினி போட்டிபோட்டுக் கொண்டு நடித்திருப்பார்கள்.
மலையாளத்தில் அனியத்தி புறாவு என இயக்குனர் ஃபாசில் இயக்கிய படம் தான் தமிழில் காதலுக்கு மரியாதை என வெளியாகியது. ”கூட்டிட்டு போங்க உங்க மருமகளா” மொத்த படமும் இந்த ஒருவரியில் முடிவுக்கு வந்து விடும்.
6. காதல் கோட்டை:
‘தல’ அஜித்குமார், அகத்தியன் கூட்டணியில் வந்த அற்புதமான திரைப்படம். பார்க்காமலேயே காதல் என்ற புது காதலை, உண்மையான நம்பகத்தன்மையோடு வந்த படம். அஜித்தும், தேவயானியும் சிறப்பாக நடித்திருப்பார்கள் இந்த படத்தில். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி, ரசிகர்களை சீட் நுனியில் உட்கார வைத்தது.
பார்க்காமலே காதல்’, இதுதான் படத்தின் மையக்கரு. இயக்கத்துக்காக தேசிய விருதையும் இயக்குனர் அகத்தியனுக்கு பெற்றுத்தந்தது. ’நலம் நலமறிய ஆவல்’ என கடிதத்தின் வழி கட்டப்பட்ட இந்த காதல் கோட்டை அஜித்தின் பெயர் சொல்லும் படங்களில் முக்கியமானது.
7. காதல்:
யதார்த்த காதலைச் சொன்ன சினிமா என்ற வகையில் இது ஒரு வித்தியாசமான படம். ஓர் அழகிய இளம் ஜோடியின் காதல் அறுத்தெரியப்படுவதுதான் கதை. அதில் இருந்த அன்பு, உண்மை, ஆழம், நெஞ்சைக்கீறும் வலி .
இளைஞர்களை கவனிக்க வைத்த வெற்றி. இயக்குநர் பாலாஜி சக்திவேலின் திரைப்பட உலகில் விஸ்வரூபம் இப்படம்.கிளைமாக்ஸில் பரத் மனநலம் பாதிக்கப்பட்டவராக காட்டபடும் காட்சி படம் பார்ப்பவர்களை சட்டென்று திகைக்க வைத்து விடும்.
8. யாவரும் நலம்:
விக்ரம் கே.குமார் இயக்கத்தில் பார்வையாளனை நகத்தைக் கடித்தபடி இருக்கையின் நுனியில் அமர வைத்த படம் தான் யாவரும் நலம். .புது அபார்ட்மெண்டில் குடியேறும் மாதவன் விசித்திரமான நிகழ்வுகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. அதன் தொடர்ச்சியாக அவர் வீட்டில் மாத்திரம் மதியம் 01.00 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடரில் நிகழும் சம்பவங்கள்.
அதன் ஆணிவேரைத் தேடி மாதவன் பயணிப்பதுதான் மீதப்படம். பேய் படங்களில் இப்படி ஒரு கிளைமாக்ஸ் தமிழ் சினிமாவிற்கு ரொம்ப புதுசு. இந்த படத்தை சரியாக கவனித்து பார்த்தால் தெரியும் படத்தில் 20 நிமிடத்திற்கு ஒருமுறை ட்விஸ்ட் வரும்.
***************
மேலும் பல திரைப்படங்களின் கிளைமாஸ் தகவல்களை வேறு ஒரு பதிவில் மீண்டும் இடுகை செய்கிறோம்.
This website uses cookies or similar technologies, to enhance your browsing experience and provide personalized recommendations. By continuing to use our website, you agree to our Privacy Policy
Post a Comment
0 Comments